சமூக வலைதளத்தில் மோடி அரசுக்கு எதிராக களமிறங்கிய மாணவர்கள்!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #AntiStudentModiGovt என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் ஐஐடி போன்றவற்றிற்கான ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 ஆம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து சகஜநிலை ஏற்படாத நிலையில் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும், நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி நுழைவு தேர்வுகள் நடைபெறும் என கூறியுள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேர்வுகள் நடக்கும் என கூறப்பட்டதையடுத்து செப்.13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புகள் இந்தியாவின் பல்வேறு தலைவர்களிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும் வெளியாகி வருகிறது. எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக சமூக வலைதளமான டிவிட்டரில் #AntiStudentModiGovt என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.