ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் ஊர் தாண்டி சென்று அவமானப்பட்ட இளைஞர்!

கடலூர் அருகே ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற இளைஞர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வாலிபர் வினோத்குமார் (28) வயது . இவர் வெப் டிசைனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவருக்கு பேஸ்புக்கில் நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் அவ்வப்போது ஆபாச புகைப்படங்களை அனுப்பி வினோத்குமாரின் சபலத்தை தூண்டி விட்டுள்ளார். இதனை அடுத்து சபலத்திற்கு ஆளான வினோத்குமார் நிஷாவுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
இந்நிலையில் வினோத்குமாரை நேரில் சந்திக்க நிஷா அழைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பண்ருட்டியில் இருந்து திருச்சிக்கு பைக்கில் சென்ற வினோத்குமார் நிஷா கூறிய இடத்திற்கு சென்று அவரை நேரில் பார்த்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்குமாரை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பர்ஸ், ஸ்மார்ட்போன், ஏடிஎம் கார்டு மற்றும் பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர்.
இதனை அடுத்து அங்கிருந்த ஒரு சில நபர்களிடம் துணியை வரவழைத்து அணிந்து கொண்ட வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் நிஷா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இன்னும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.