பாலியல் புரோக்கரை எரித்துக் கொல்ல முயன்ற பெண் கைது!

பாலியல் தொழிலில் ஈடுபட்டு ஈட்டிய பணத்தை பங்கு போடுவதில் இளைஞருடன் ஏற்பட்ட தகராறால் அவரை எரித்து கொல்ல முயன்ற இளம்பெண், அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி வீட்டில் தீபக் எனும் இளைஞர் தீக்காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அதனை கண்ட காவலாளி போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்துவிட்டு, விசாரணை நடத்தினர். சமைக்கும் போது தீ விபத்து நடந்ததாக கூறினார்.
ஆனால் அவர் உடலில் அடிப்பட்ட காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்து அவரது வீட்டை சோதனையிட்டனர். செல்போன்களை கைப்பற்றி ஆராய்ந்ததில் இரு எண்களுக்கு தீபக் அடிக்கடி பேசியது தெரிந்தது. அந்த எண்கள் மீனம்பாக்கத்தில் இருந்துள்ளது. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்ததில் சம்பவத்திற்கு சிறிது நேரம் முன் ஒரு பெண், ஒரு ஆண் தீபக் வீட்டிலிருந்து வெளியேறுவது தெரிந்தது.
விமான நிலைய போலீசாருக்கு தகவல் தரப்பட்டு மீனம்பாக்கத்தில் இருந்த இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் குமரன் நகர் போலீசார் நடத்திய விசாரணையில் டில்லியைச் சேர்ந்த நிலா, ஹேமந்த் என்பது தெரிய வந்தது. நிலாவை வைத்து ஹேமந்த், தீபக் பாலியல் தொழில் செய்துள்ளனர். பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு தீபக் அடித்து உடலில் தீ வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.