ஐஏஎஸ் அதிகாரிகளின் கெடுபிடியால் ஆட்டோ ஓட்டுநராக மாறிய மருத்துவர்!

கர்நாடகா மாநிலத்தில், மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெல்லாரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிபுணராக பணியாற்றிவந்தார் மருத்துவர் ரவீந்திரநாத். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும்படி, ரவீந்திரநாத்திடம் சில ஐஏஎஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ரவீந்திரநாத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கட்டாய விடுப்பு வழங்கி ரவீந்திரநாத்தை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர் அப்பகுதி ஐஏஎஸ் அதிகாரிகள். பின்னர், கட்டாய விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய இரண்டே நாளில் மீண்டும் கட்டாய விடுப்பு வழங்கியுள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அரசு மருத்துவர் தன் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
பின்னர், தன் சொந்த ஊரான தாவணகெரே மாவட்டத்திற்கு சென்றுள்ளார். சொந்தமாக கிளீனிக் வைக்கவேண்டும் என்றாலும் அந்த ஐஏஎஸ் அதிகாரிகளிடமே செல்லவேண்டும் என்பதால் ஆட்டோ வாங்கி ஓட்ட முடிவெடுத்துள்ளார். அதனை அடுத்து, தனியார் நிறுவனம் மூலம் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி ஓட்டிவருகிறார். அந்த ஆட்டோவில், “ஐஏஎஸ் அதிகாரிகளால் பாதிப்படைந்த அரசு மருத்துவர்” என கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ரவீந்திரநாத்திற்கு தொடர்புகொண்டு மீண்டும் பணிக்கு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், அந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.