இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதற்கு ஊதியமாக வழங்கும் ரூ.3 கோடியே 47 லட்சத்தை தனது ஏஆர்ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தும்படி ரஹ்மான் கூறியுள்ளார்.
இதன் மூலம் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ஏ.ஆர்.ரஹ்மான் முயற்சித்ததாக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணையில்,ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு விளக்கத்தை ஏற்ற முதன்மை ஆணையர் விசாரணையை கைவிட்டு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.