பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா!! மக்களை எச்சரித்துள்ள சீன அரசு!!

பிரேசிலில் இருந்து சீனாவின் இரண்டு முக்கிய நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் உணவு பேக்கேஜிங் ஆகியவற்றில் புதிய கொரோனா வைரஸின் தடயங்கள் இருப்பதாக சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அசுத்தமான உணவு ஏற்றுமதியால் இரு நாடுகளுக்கு இடையில் புதிய சர்ச்சைகள் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் எழும்பியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் உள்ள உகைன் நகரில் உருவாகி பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவின் ஷென்ஷென் எனும் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை சோதித்து பார்த்தபோது அதில் கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கோழி இறைச்சி பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் எனும் ஆலையில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றி அரசு தரப்பில் கூறும்போது, இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர்வாழ் பொருட்களை வாங்கும்பொழுது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து நுண்ணுயிரியல் ஆய்வகத்தின் தலைவரான லி ஃபெங்கின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அசுத்தமான பதப்படுத்தப்பட்ட உணவு புதிய தொற்றுநோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ்கள் இரண்டு ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும். ஆனால் விஞ்ஞானிகள் இதுவரை COVID-19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் பதப்படுத்தப்பட்ட உணவு வழியாக பரவக்கூடும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சீனாவின் பிற நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளின் பேக்கேஜ் மேற்பரப்பில் கொரானா வைரஸ் தொற்று இருந்ததாக தகவல் வெளியாகியது, தற்பொழுது ஷென்ஷென் நகரில் வெளியாகியுள்ள இந்த தகவல் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.