உயிரியல் பூங்காவில் 29 ஆண்டுகள் தன்னை வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரையே கொரில்லா ஒன்று கடித்துக் குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்காவில் மலாபோ என்ற கொரில்லாவை, அது பிறந்ததிலிருந்து 29 வயது வரை வளர்த்து வந்த பயிற்சியாளரான 46 வயது பெண் ஒருவர், வழக்கம் போல அதற்கு காலை உணவு கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது மூன்று கதவுகளை உடைத்துக்கொண்டு வந்த அந்த கொரில்லா, அந்த பெண்ணை கடித்து துவம்சம் செய்துள்ளது.
கிட்டத்தட்ட 200 கிலோ எடையுள்ள அந்த கொரில்லாவிடம் சிக்கிய அந்த பெண்ணின் இரு கைகளும் உடைந்துள்ளதோடு, அவரது மார்பு மற்றும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தித்தான் அந்த கொரில்லாவை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரியல் பூங்கா தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
