காணாமல் போன 5 அருணாச்சலப் பிரதேச இளைஞர்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்த சீனா!

அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் கடந்த வாரம் காணாமல் போன 5 இந்தியர்களை சீன ராணுவம் இன்று இந்தியாவிடன் ஒப்படைத்தது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா சீனா எல்லையில் அவ்வப்போது இரு நாட்டு மக்களும் வழிதவறி எல்லை தாண்டி செல்வதும், பின்னர் ராணுவம் மூலம் மீட்கப்படுவது வழக்கமான ஓன்றாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த செவ்வாயன்று அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தை சேர்ந்த 5 வழிதவறி சீனாப் பகுதிகளில் சென்றதாகவும் அனைவரையும் சீனா ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக வனப்பகுதிக்குச் சென்று தப்பியவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ராணுவத்திடமும் புகார் கொடுக்கப்பட்டது. லடாக் கிழக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீனா ராணுவத்துடனான மோதல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதலில் கருத்து தெரிவித்த சீனா ராணுவமும், அருணாச்சல பிரதேசம் எங்களது தெற்கு திபெத் பகுதி என கூறியது. இதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. பின்னர் 5 இந்தியர்களும் தங்களது பகுதியில் இருப்பதாக சீனா ராணுவம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த 5 பேரையும் இன்று ஒப்படைக்க சீனா ராணுவ அதிகாரிகள் முன்வந்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்களையும் இரு நாட்டு எல்லையான கிபிட்டுவில் சீனா ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 5 பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு குடும்பத்தினரிடம் சேர்க்கப்படுவார்கள் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.