ஆப்பிள் வாட்சை ஆர்டர் செய்த பிரபலத்திடம் கல்லை கொடுத்து கல்லா கட்டிய ஆன்லைன் நிறுவனம்!!

ஆப்பிள் வாட்சை ஆர்டர் செய்த பிரபல இசையமைப்பாளருக்கு கல்லை கொடுத்து ஆன்லைன் நிறுவனம் ஒன்று ஏமாற்றியுள்ளது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர். இவர் ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கைதி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில், ஆன்லைனில் பொருள் வாங்கி தான் ஏமாந்தது குறித்த அதிர்ச்சி தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் சாம்.சி.எஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “என்னுடைய சகோதரனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுக்க ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தேன். அது வந்த போது அதை திறந்து பார்த்து அதிர்ச்சியானோம். அதில் கற்களை மிக அழகாக பேக் செய்து அனுப்பி இருந்தார்கள். அது பற்றி சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் புகார் அளித்த போது அவர்கள் எங்களது புகாரை நிராகரித்து, பணத்தை திருப்பித் தர முடியாது என கூறி விட்டனர். இதனால் தயவு செய்து அந்த நிறுவனத்திலிருந்து வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்” என சாம்.சி.எஸ் அந்நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார்.