அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்; பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது..

அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் சென்னையில் இருந்து இன்று (அக்.,29) அதிகாலை 5:10 மணிக்கு புறப்பட்டது. 181 பயணிகளுடன் பயணித்த விமானம், நடுவானில் பறந்தபோது தான் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக விமானி கண்டுபிடித்தார். இதனால் உடனடியாக தரையிறக்க தீர்மானித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து ரன்வேயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் வேகமாக செய்யப்பட்டன. காலை 6:15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் கீழே இறங்கியதும் விமானம் பழுதுபார்க்கப்பட்டது.
பின்னர் காலை 10:23 மணிக்கு மீண்டும் அந்தமானுக்கு புறப்பட்டது. சரியான நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டுபிடித்துள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.