ஐந்து ரூபாய் இல்லை… கண் முன்னே கணவரின் உயிர்போனது!

மருத்துவமனையில் அனுமதிச் சீட்டு வாங்க 5 ரூபாய் இல்லாததால், மருத்துவமனை வெளியிலேயே ஒருவர் மரணமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் தக்காட். இவர் நீண்ட நாட்களாக காசநோயால் அவதிப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அவரது உடல்நிலை மோசமானதாக கூறி மத்தியப் பிரதேஷ் குணாப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவரது மனைவி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இருந்த பணியாளர்கள், நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்க 5 ரூபாய் செலுத்தி அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால் சுனிலின் மனைவி தன்னிடம் 5 ரூபாய் இல்லை எனக் கூறியதுடன், தயவு செய்து சுனிலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்தவர்களிடம் தனக்கு 5 ரூபாய் தந்து உதவி செய்யுமாறு கேட்டுள்ளார் சுனிலி மனைவி. ஆனால் அவருக்கு யாரும் உதவ முன் வரவில்லை. இதனைத்தொடர்ந்து கணவரை மருத்துவமனையில் அனுமதிக்க கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவர் காத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. வெகுநேரமாகியும் சிகிச்சை அளிக்காததால் சுனில் கடந்த வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் அவரது ட்விட்டர் பக்கத்தில் “ குணா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண், பெண் குழந்தையுடன் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற நாள் முழுவதும் கெஞ்சி கொண்டிருந்துள்ளார். அவரிடம் 5 ரூபாய் இல்லை என்பதற்காக அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது கணவர் மனைவியின் முன்னதாகவே உயிரிழந்துள்ளார். முதல்வர் சிவராஜ் மாநிலத்தின் நிலை இதுதானா? என்று குறிப்பிட்டுள்ளார்.