மும்பையில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் முக்கிய ஆய்வுத் தகவல்!

மும்பை மாநகராட்சி சார்பில் மக்களிடம் செரோ-ஆய்வு நடத்தினர். செரோ-ஆய்வு என்பது மக்களிடம் இருந்து ரத்த மாதிரியைப் பெற்று அதில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியிருக்கிறதா என்பதை பரிசோதிக்கும் ஆய்வாகும்.
இதன்படி, 8,870 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மும்பை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 57 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் அறிகுறியில்லாமல் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள்.
இதுதவிர குடிசைப்பகுதியில் வசிக்காத 16 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியுள்ளது.
அதாவது ஹெர்ட் இம்யூனிட்டி(மந்தை நோய் தடுப்பாற்றல்) பற்றி அறிந்து கொள்ள இந்த முடிவுகள் மதிப்பு மிகுந்ததாக இருக்கும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த 3 வார்டுகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆண்களைவிட பெண்கள் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாக இருந்தனர்.
மக்கள் நெருக்கத்துடன் வாழ்ந்து வருவது, ஒரே கழிவறையை பயன்படுத்துவது உள்ளிட்டவையே அவர்ளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி உருவானதற்கு முக்கிய காரணமாகும்.
“மந்தை நோய் தடுப்பாற்றல் உருவாகிவிட்டதா என்பதை இப்போது கணிக்க முடியாது. அதற்கு குறிப்பிட்ட அளவு மக்கள் நோய்தடுப்பாற்றல் பெறுவது அவசியம். இது 3 வார்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மட்டும் தான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.