நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய அர்ஜுன் சம்பத்!!

நீட் தேர்வு குறித்து கருத்து சொன்ன நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்குவார் என அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முதல்நாள் தமிழகத்தில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு மரணங்கள் தொடர்வது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் சூர்யா, நீட் தேர்வை மிக கடுமையாக விமர்சித்தார். நீட் என்பது மனுநீதித் தேர்வு என்றும், கிராமப் புற மாணவர்களின் மருத்துவ கனவை நாசமாக்குகிறது எனவும் சாடியிருந்தார். நீதிமன்றம் நீட் தேர்வை அனுமதித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவை இல்லை என இன்று முடிவு செய்திருக்கிறது.

இதனிடையே திண்டுக்கல்லில் நேற்று, இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா கலந்து கொண்டு பேசினார். அவர், “அகரம் பவுண்டேசன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறார் நடிகர் சூர்யா.

நீட் விவகாரத்தில் சூர்யா, நீதிமன்றத்தை அவமதித்து பேசியிருக்கிறார். நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்றார்.
அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன.