“தமிழகத்தில் ஓட்டல்களில் ஏ.சி. வசதிகளை பயன்படுத்தலாம்” – தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் ஓட்டல்களில் ஏ.சி. வசதிகளை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இம்மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து ஓட்டல்களிலும் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி
வரை 50 சதவீத இருக்கைகளில் உணவு பரிமாற அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நிலையான வழிகாட்டி
நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அங்கு ஏ.சி. வசதிகளை பயன்படுத்தக்
கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வணிக வளாகங்கள்(மால்), நகைக்கடை, ஜவுளிக்கடை போன்ற பெரிய
கடைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஏ.சி. மற்றும் காற்றோட்ட
வசதிகளை பயன்படுத்தலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே ஓட்டல்களிலும் ஏ.சி. வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும்,
அதற்கேற்ற வகையில் அரசாணையில் திருத்தம் செய்யலாம் என்றும் அரசுக்கு
திருத்தப்பட்ட முன்மொழிவை வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ளார்.

அந்த முன்மொழிவை ஏற்று அதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்கிறது. அதன்படி, காலை
6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மத்திய அரசின் வழிகாட்டுதல்களை
பின்பற்றி ஏ.சி. மற்றும் காற்றோட்ட வசதிகளை ஓட்டல்கள் பயன்படுத்த அனுமதி
அளிக்கப்படுகிறது. பார்சல்களை இரவு 9 மணி வரை வழங்கலாம். தேநீர் கடைகள்
காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை இயங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x