இன்றுமுதல் தமிழகத்தில் வீடு தேடி வருகிறது நகரும் நியாய விலைக்கடைகள்!

3,501 நகரும் நியாய விலைக்கடைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார்.
மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சென்று பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் நகரும் நியாய விலைக்கடைகள் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி, 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 ஆயிரத்து 501 நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த நகரும் நியாய விலைக்கடைகள் இன்று முதல் சேவையை தொடங்குகின்றன. இந்த திட்டத்தின் மூலமாக 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மின்சாரம் மற்றும் மின்சக்தியில் இயங்கக் கூடிய ஆட்டோக்களையும் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.