கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தாயை, வீட்டிற்குள் அனுமதிக்காமல் துரத்திவிட்ட கொடூர மகன்!
![](https://thambattam.com/storage/2020/09/how-does-covid-19-invade-our-bodies-so-easily-333258.jpg)
கொரோனா பாதித்து குணமடைந்த பிறகும், தொற்று பாதிப்புக் காரணமாக, பெற்ற தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகன் மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த பாலாமணிக்கு (65) கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பூரண குணம்பெற்று, கொரோனா தொற்று இல்லை என கடந்த வாரம் பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது மகனுக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தகவல் சொல்ல முயற்சித்தது. அவர் எடுக்காததால், கடைசியாக மருத்துவமனையே பாலாமணியை அவரது வீட்டு வாசலில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டது.
![](https://thambattam.com/storage/2020/09/istockphoto-179042818-612x612-1-300x200.jpg)
ஆனால் தனது தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகன் மறுத்துவிட, கொரோனா தொற்றுக் காரணமாக முதியோர் இல்லமும் மூடப்பட்டதால் செல்ல வழியின்றி, வீட்டின் எதிரில் உள்ள காலியிடத்தில் தங்கியிருக்கிறார் பாலாமணி. வீட்டில் இருந்தால் அக்கம் பக்கத்தினர் கேட்பார்களே என்று அஞ்சி, மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக இருக்கும் பாலாமணியின் மகன், வீட்டை வெளியே பூட்டிவிட்டு, தனது மனைவி, பிள்ளைகளுடன் வெளியே சென்றுவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மூத்த நீதிபதி கிரண்மயி, தேவையான உதவிகளை அளிப்பதாக பாலாமணிக்கு உறுதிமொழி அளித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தங்களது நெருங்கிய உறவுகளைக் கூட நெருங்க விடாமல் செய்யும் சில மனிதாபிமானமற்ற நபர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.