“ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா? இது தான் மோடி அரசின் சாதனை” – முத்தரசன்

“நாடு மோசமான நிலையை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசை விமர்சனம் செய்து பேசினால் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாக்குகிறார்கள். ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா?. இதுதான் மோடி அரசின் சாதனை” என்று மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாகத் தாக்கி பேசினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”நாடு மிகவும் மோசமான நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணை காவல்துறையினரே எரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்கச் சென்ற ராகுல் காந்தியைக் கீழே தள்ளி வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். நாடறிந்த ஒரு தலைவரை இப்படிக் காவல் துறையினர் தள்ளிவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து நாடுமுழுவதும் பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு எதாவது முயற்சி செய்ததுண்டா? இல்லை. நாடு மோசமான நிலையை நோக்கிச்சென்றுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசை விமர்சனம் செய்து பேசினால் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாக்குகிறார்கள். ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா. இது தான் மோடி அரசின் சாதனை” என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.