‘ஹிந்தி தெரியாததால் கடன் கிடையாது’ என்ற வட இந்திய வங்கி மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக மருத்துவர்!!
“ஹிந்தி தெரியாதா? கடன் கிடையாது!” என கூறிய வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளமாகும். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் சொந்த நிலம் மற்றும் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார்.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.
அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi” (உனக்கு ஹிந்தி தெரியுமா?) என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I dont know Hindi, but I know Tamil and English” (எனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் தமிழும், ஆங்கிலமும் தெரியும்) என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வட இந்திய வங்கி மேலாளரோ, “I am from Maharashtra, I know Hindi. Language problem” (நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன், எனக்கு ஹிந்தி தெரியும், மொழி பிரச்சினை) என தெரிவித்துள்ளார்.
மருத்துவர் மீண்டும் தனது ஆவணத்தை காண்பித்து, இதே வங்கி கிளையில்தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்துள்ளார்.
இதனால் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த மருத்துவர், மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளர் மேல் மானநஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ‘ஹிந்தி தெரியாது’ என்ற காரணத்தினால், கடன் கிடையாது என மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாக ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் வருத்ததுடன் தெரிவித்தார்.