“நமது எதிரியிடம் இருந்து ஏன் பணத்தை பெற்றீர்கள்?” – மத்திய அரசை விளாசிய எம்.பி. மஹூவா மொய்த்ரா!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் நன்கொடை வந்துள்ளது. இந்த நன்கொடையை கையாளுவதற்கு பிஎம் கேர்ஸ் என்ற நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கணக்குகள் மத்திய தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வரும் நிதிகள் எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற தகவலை மக்கள் பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில ஏற்பாடுகளின் தளர்வு மற்றும் திருத்தம்) மசோதா மீது கடந்த சனிக்கிழமை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்ற மேற்குவங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா மத்திய அரசை சரமாரியாக விளாசியுள்ளார்.

இது குறித்து எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:-

பிஎம் கேர்ஸ் நிதிக்கு 38 பொதுத்துறை நிறுவனங்கள் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது பிஎம் கேர்ஸ் நிதியின் மொத்த தொகையில் 70 சதவிகிதம் ஆகும். இவை பொதுமக்களின் பணம். இவை எப்படி மத்திய தணிக்கைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது?.

கோல் இந்தியா நிறுவனம் பிம் கேர்ஸ் நிதிக்கு 221 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஆனால் கோல் இந்தியாவின் 90 சதவிகித தொழில் பணிகள் நடைபெறும் மேற்குவங்காளத்திற்கும், ஜார்க்கண்டிற்கும் அந்நிறுவனம் நன்கொடை வழங்கவில்லை.

இது மக்கள் நிதியை அரசனுக்கு பரிசுகளை வழங்க பேரரசரின் பிரபுக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது போல உள்ளது. சீன நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடை பெற்றுவருகிறோம்.

இது மிகவும் மோசமான செயல். அனைவரையும் வேவுபார்ப்பதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜியோமி நிறுவனம் 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்திய அரசால் தற்போது தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் நிறுவனம் 30 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. சீன ராணுவத்துடன் நேரடித்தொடர்பில் உள்ள ஹூவாய் நிறுவனம் 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

நமது எதிரியிடம் இருந்து ஏன் பணத்தை பெற்றீர்கள்? பெற்ற பணத்தை திருப்பிக்கொடுக்காதது ஏன்? பிரதமர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், பிரத நிவாரண நிதி விவாதத்திற்கு அப்பார்பட்டது அல்ல.

எல்லாவற்றிற்கும் ஒரு தனி நபரின் பெயரைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதன் தேவையும் என்ன? இது ஒரு ஜனநாயக நாடு. இது தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சதிகாரமல்ல. இதை இந்த ஆளும் அரசுக்கு நாங்கள் நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

பிரதமரின் நிதி என்ற பெயரிலேயே இது இந்திய அரசின் அதிகாரம் பெற்றது என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இது வரவில்லை. வெளிப்படைத்தன்மை என்ற கூற்றிலிருந்து நீங்கள் ஓடுகிறீர்கள்.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x