“பெரியார், கருணாநிதி வழியில் தான் 67 வயதிலும் திருமணம் செய்துள்ளேன்!” திமுக துணை செயலாளர் பேட்டி!

67 வயதான திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலர், 28 வயது இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டியை சேர்ந்தவர், சுந்தரேசன், 67; தி.மு.க.,வில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியிடம் உதவியாளராக, அரசியல் வாழ்க்கையை துவங்கி, அரசியலில் படிப்படியாக வளர்ந்தார். தொடர்ந்து, ஆறுமுறை சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராக தேர்வானார். பின், எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக மாறி, தி.மு.க., ஒன்றிய செயலர், மாவட்ட பொருளாளர் என உயர்ந்து, தற்போது, மாவட்ட துணை செயலராக உள்ளார்.
‘சாவல்பூண்டி சங்கப்பலகை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல பேச்சாளர்களை உருவாக்கினார். இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அபிதா (28), என்ற பெண், பட்டிமன்ற பேச்சாளராக, நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். நாளடைவில், இருவரும் காதலிக்க துவங்கினர். மூன்று ஆண்டுகளாக காதலித்த நிலையில், ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.
சுந்தரேசனுக்கு ஏற்கனெவே மனைவி, மகன், மற்றும் மகள் உள்ளனர். பேத்தி வயதில் உள்ளவரை, தி.மு.க., நிர்வாகி திருமணம் செய்து கொண்டதாக, சமூக வலைதளங்களில், அ.தி.மு.க.,வினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.
இது, தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, சுந்தரேசன் கூறுகையில், “வயதான காலத்தில், தன் உதவிக்கு ஒருவர் தேவை என மணியம்மையை, ஈ.வே.ரா., திருமணம் செய்தார். நான் அவரது வழியில் வந்தவன். தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, காலையில் கோபாலபுரம், மாலையில், சி.ஐ.டி., காலனிக்கு செல்வார். அதுபோல், என் மனைவி தரப்பிலும், அபிதாவின் பெற்றோர் தரப்பிலும் சம்மதம் பெற்று, காதலித்து திருமணம் செய்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். இரு மனைவியரும், அருகருகே தனித்தனியாக வசிக்கின்றனர். இருவர் வீட்டிற்கும் சென்று வருகிறேன்.” இவ்வாறு, அவர் கூறினார்.