ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட மின் தடையால் 2 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்!

திருப்பூரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு மேல் சிகிச்சைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதிப்பட்டதாகவும், அந்த ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றசாட்டை முன் வைத்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, “மின்தடை ஏற்படுவதற்கும் ஆக்சிஜன் வழங்குவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது, சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகளின் இறப்பிற்கு வேறு உடல் உபாதைகள் தான் காரணம்” என அலட்சியமாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் மின்தடையால் ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.(1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 22, 2020
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் மின்தடையால் ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நோயின் வீரியத்தால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நிர்வாக அலட்சியத்தால் இப்படி அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது.
இதற்குக் காரணமானவர்கள் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவேண்டும். தமிழகத்தில் இனி இத்தகைய சம்பவம் நிகழாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அனுப்பிட வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.