வேகமாக உருகும் பனிமலைகளால், அதிகரித்து வரும் கடல் நீர்மட்டம்…! உலகை எச்சரிக்கும் நாசா!

அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி வருவதால், 2,100-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு உயரும் என, நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுற்றுச்சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. அதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்நிலையில் அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகி வருவதால், கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு உயர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை வைத்தே இதனை கணக்கிட்டுள்ளனர். இனி வரும் காலத்தில் பனிக்கட்டிகள் உருகுவதை பொறுத்தே, கடல் மட்டம் உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பனிக்கட்டிகள் வாயிலாக உருகும் நீரானது உலக கடல்மட்ட உயர்வில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. கிரீன்லாந்தில் 2000 வருடத்தில் இருந்து 2100 ஆம் வருடத்திற்குள் உலக கடல் மட்டம் 8 சென்டிமீட்டர் முதல் 27 சென்டிமீட்டர் அளவு உயரும். இதனைப்போன்று அண்டார்டிகாவில் 3 சென்டிமீட்டர் முதல் 28 சென்டிமீட்டர் வரையிலும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.