அக்டோபரில் காலாண்டு தேர்வு-புதுச்சேரி கல்வி துறை அறிவிப்பு!!!

அக்டோபர் முதல் வாரத்தில் புதுச்சேரியில் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளதாகப் பல தனியார் பள்ளிகளில் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இச்சூழலில் ஆன்லைன் வகுப்புகள் புதுச்சேரியில் தொடர்ந்து நடக்கின்றன.
கரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள், கல்லூரிகள் புதுச்சேரியில் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு இறுதிப் பருவத் தேர்வுகள் நடந்து வருகின்றன.
புதுச்சேரியில் தமிழகத்தின் பாடத்திட்டமே கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஐந்து நாட்களுக்கு காலாண்டு விடுப்பு விடப்பட்டுள்ளது. இந்நாட்களில் ஆன்லைன் பாடம் இல்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரியில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. பல தனியார் பள்ளிகள் முதல் பருவத் தேர்வு முடிந்து, அக்டோபர் முதல் வாரத்தில் காலாண்டுத் தேர்வு தொடங்குவதாகப் பட்டியல் வெளியிட்டுள்ளன. சில பள்ளிகளில் அத்தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன. மாணவர்கள் வீடுகளில் இருந்தே தேர்வுகளை எழுதுகின்றனர்.
இதுகுறித்துப் புதுச்சேரிக் கல்வித்துறை தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரியில் ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்படி வகுப்புகள் தொடரும்” என்று தெரிவித்தனர்.