டெங்கு சீசன் துவங்கிடுச்சு உஷார்!!!

திருப்பூர்:’டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழைநீர், வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால், கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என, சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அவ்வப்போது மழையும் பெய்வதால், தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுப்புழு உருவாகி, டெங்கு பரவ வாய்ப்புள்ளது.

எனவே, தேவையற்ற இடங்கள் மற்றும் பொருட்களில், மழைநீர் தேங்குவதை தடுக்கவும், திறந்திருக்கும் தண்ணீர் தொட்டிகளில் கொசு மருந்து தெளிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.மக்களும், தங்கள் வீட்டைச்சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் உள்ள தொட்டி, பாத்திரங்கள், குடிநீர் தொட்டிகளை, வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.