தொழில் கடன் பெற்று அதில் ரூ.2 கோடி சொகுசு கார் வாங்கிய இளைஞர்!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் கொரோனா சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் தனது சிறு தொழில் நிறுவன இயக்க செலவுகளுக்கு ரூ.30 கோடி கடன் பெற்று அதில் சொகுசு கார், சொகுசு விடுதி என உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் சரிந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த 2 டிரில்லியன் டாலர் கொரோனா வைரஸ் மசோதா, கேர்ஸ் சட்டம் என்ற பெயரில் மார்ச் இறுதியில் அமலுக்கு வந்தது. சிறு நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கவும், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பாமல் சம்பளம் வழங்கவும் 349 பில்லியன் டாலர் நிதியும் இதில் அடக்கம். அமெரிக்க பாராளுமன்றம் கூடுதலாக 310 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியது.
இந்த நிதியை பெரும்பாலானோர் போலியான நிறுவனங்கள், செயல்படாத நிறுவனங்களை கணக்கு காட்டி மோசடியாக பெற்றுள்ளனர். அந்த விஷயங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், மோசடியில் ஈடுபட்ட புளோரிடாவைச் சேர்ந்த ஹைன்ஸ் (29) என்பவரை தற்போது கைது செய்துள்ளனர்.
7 நிறுவனங்கள் நடத்துவதாகவும், 2020 முதல் காலாண்டில் தனது நிறுவன ஊழியர்களுக்கு லட்சக்கணக்கான டாலரை சம்பளமாக அளித்துள்ளதாகவும் போலியான ஆவணங்களை வங்கியில் தாக்கல் செய்து சுமார் ரூ.30 கோடி கடன் பெற்றுள்ளார். கடன் தொகை கைக்கு வந்த அடுத்த வாரம் ரூ.2 கோடிக்கும் மேலுள்ள லம்போர்கினி ஹூராக்கன் ஈவோ சொகுசு காரை வாங்கி மியாமி கடற்கரையைச் சுற்றி வந்துள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.