பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு – காஷ்மீர், குஜராத்தின் ஜூனாகத் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மற்றும் குஜராத்தின் ஜூனாகத் ஆகிய பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய வரைபடத்தை அறிமுகம் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்நாள் நமக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் – அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாகிஸ்தான் மக்களின் ஆதரவுடன் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜம்மு – காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில எல்லைப் பகுதிகளை இணைத்து, புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல் ஏற்கத்தக்கதல்ல. பாகிஸ்தானின் அபத்தமான இந்த நடவடிக்கை சட்டப்படி செல்லாது.
பாகிஸ்தானின் புதிய வரைபடம் எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதையே உலகிற்கு உணர்த்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.