லடாக் எல்லை விவகாரம்: மக்களவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங்

லடாக் எல்லை விவகாரம் குறித்து, மக்களவையில் இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.
காஷ்மீரின் லடாக் எல்லையில், இந்திய – சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு 40-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா – சீன ராணுவ அதிகாரிகள் பல முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அண்மையில் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியது. ரஷ்யாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், சீன பாதுகாப்புத் துறை அமைச்சரையும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே, எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், லடாக் எல்லை விவகாரம் குறித்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் மக்களவையில் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.
அப்போது சீன பாதுகாப்பு அமைச்சருடான சந்திப்பு மற்றும் அந்நாட்டுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து அவர் விளக்குவார் என தெரிகிறது.