“எங்கள் நாட்டின் அதிகாரி கொல்லப்பட்டது குறித்து வடகொரியா விசாரணை நடத்த வேண்டும்!” தென்கொரியா வலியுறுத்தல்!
எல்லைப் பகுதியில் தங்களது அரசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக வட கொரியா விசாரணை நடத்த வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தென் கொரிய அதிபா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், வட கொரியப் படையினரால் நமது அரசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்த, அந்த நாட்டை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளும் இணைந்து கூட்டு விசாரணை நடத்துவது தொடா்பாக வட கொரியாவைக் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில், சட்டவிரோதமாக மீன் பிடிக்கப்படுவதைக் கண்டறிவதற்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு அரசு அதிகாரி, எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டதாகவும், வட கொரிய ராணுவம் அவரை சுட்டுக் கொன்று உடலை எரித்ததாகவும் தென் கொரியா வியாழக்கிழமை கூறியது. மேலும் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து, அந்தச் சம்பவம் குறித்து வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன் வருத்தம் தெரிவித்ததாக அவரது ஆலோசகா் சூ ஹூன் வெளளிக்கிழமை தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.