புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய திமுக கட்சியினர்!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆர்ப்பாட்டத்தை தொடகியுள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை என்பதே இல்லாமல் போய்விடும் என அச்சம் தெரிவித்தனர். ஆனால் இதனை மறுத்த மத்திய அரசு, விவசாயிகளை காக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகவும் இந்த சட்டங்கள் மூலமாக விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்றும் தெரிவித்தது.
கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட இந்த வேளாண் மசோதாக்களுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக தோழமை கட்சிகள் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும், திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் கீழ் அம்பியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை துண்டு, மாஸ்க் அணிந்து ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கி பேசிய அவர், “விவசாயிகளை ஏமாற்றி வரும் விஷப்பாம்புதான் எடப்பாடி பழனிசாமி. குடிமராமத்து திட்டத்தைக் காட்டி பணத்தை கொள்ளை அடிக்கும் எடப்பாடி விவசாயியா?, கிசான் திட்டத்தில் பணத்தை கொள்ளையடித்த எடப்பாடி பழனிசாமி விவசாயியா?விவசாயக்கடன்களை ரத்து செய்யக்கூறிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பழனிசாமி விவசாயியா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம், மசோதா சட்டமாவதை தடுப்பதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் பறிபோனதால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.