“கோரிக்கைகளை நிறைவேற்றினால் பேருந்துகளை இயக்குவோம்!” ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் 6 மாத காலமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் சாலை வரிகளை ரத்து செய்யவேண்டும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 7 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம்னி சங்க பொதுச் செயலாளர் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவித்தார்.
இந்நிலையில் இப்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சில கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளன. அவை, “6 மாதமாக பேருந்துகளை இயக்காததால் அதற்கான சாலை வரியை ரத்து செய்யவேண்டும். 100 சதவீதம் பயணிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றினால் உடனடியாக பேருந்துகளை இயக்கத் தயார்” என அறிவித்துள்ளனர்.