“விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது!” தமிழக முதல்வர்!

பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின், மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம்தேதி முதல் வரும் 30ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (30ம் தேதி) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 184 பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் பொது முடக்கம் கவனமுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகி உள்ளது. கொரோனா தடுப்புப்பணிகளுக்கு ரூ.7,800 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின் மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.