தேனி மக்களின் நீண்டகால கனவுத்திட்டம் “அகலரயில் பாதை” 2021 மார்ச்-ல் பயன்பாட்டிற்கு வரும் – எம்பி ஓ.பி.ரவிந்திரநாத் குமார் உறுதி

தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டமான மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், வருகிற 2021 மார்ச் மாதத்தில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருமெனவும் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்பி உறுதி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் உள்ள இடுக்கியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ஏலக்காய் மற்றும் தேயிலைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இப்பகுதி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், தேனி, போடிநாயக்கனூர் சுற்றுவட்டார மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே 1928ம் ஆண்டு போடி-மதுரை இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் விளைபொருட்களை கொண்டு செல்ல தடையின்றி விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் இந்த தடம் 2013ம் ஆண்டிற்குள் அகல ரயில்பாதையாக மாற்றப்படும் எனவும், இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் 2015ம் ஆண்டு வரை இத்திட்டத்திற்கு நிதி ஏதும் ஒதுக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஏற்கனவே பற்றாக்குறையாக நிதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி திட்ட மதிப்பீடு உயர்ந்து இப்பணிக்கு ரூ.300 கோடி வரை தேவைப்படும் எனவும், இந்த ஆண்டிற்குள் ரயில்சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.75 கோடி வரை கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே சாத்தியம் எனவும் திட்ட ஒருங்கிணைப்புக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருமென நம்பி பொது மக்களும், விவசாயிகளும் ஏமாற்றமே அடைந்து வந்தனர். இது குறித்து தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது மத்திய அரசின் ஒப்புதலோடு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்பி கூறுகையில்,

“மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டம் தொடர்பாக நான் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். பாரத பிரதமர் மோடி, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தென்னக ரயில்வே துறை உயர் அதிகாரிகளை சந்தித்து இத்திட்டத்தின் அவசியத்தை கடிதங்கள் வாயிலாக தெரிவித்து இதற்கு முன்பு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்த இப்பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

2019-2020 பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி அறிவிக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. அதன்பிறகு 2020-21 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 23ம் தேதி மதுரை-உசிலம்பட்டி வரை 37 கி.மீ. தூரத்திற்கு ரயில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்போடும், பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுரை, தேனி மாவட்ட கலெக்டர்கள், ரயில்வே துறை உயரதிகாரிகள் முயற்சியோடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காரணமாகவும், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியதாலுமே சற்று பணிகள் தாமதமானது. தற்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வருகிற 2021 மார்ச் மாதத்திற்குள் மதுரை-போடி அகலரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், தேனி தொகுதி மக்களின் 10 ஆண்டு கால கனவை நிறைவேற்றுவதே தனது லட்சியம் எனவும், மார்ச் மாதத்தில் ரயில் ஓட்டம் உறுதியாக தொடங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x