‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: அடுத்த மாதம் முதல் அமல்

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமலாகிறது. இதற்காக ரேஷன் கடைகளில் ‘பயோமெட்ரிக்’ எனப்படும் கைரேகை கருவிகள் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாடு முழுதும் இடம்பெயரும் தொழிலாளர்கள் வசதிக்காக மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பிற மாநிலங்களின் கார்டுதாரர்கள் தமிழகத்திலும்; தமிழக கார்டுதாரர்கள் மற்ற மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்.
இத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவிகளுக்கு மாற்றாக கைரேகையை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய நவீன கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஜூலை இறுதியில் இந்த பணி துவங்கிய நிலையில் இதுவரை திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கரூர், நாகை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன.மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகளில் அந்த கருவிகள் வைக்கும் பணியை இந்த மாதத்திற்குள் முடிக்க உணவு துறை திட்டமிட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.