சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!!

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் 3 காவலர்களின் ஜாமீன் மனுவை 2வது முறையாக மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ், ஆகியோர் காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவலர் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில், தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.

இதற்கு முந்தைய விசாரணையின் போது காவலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பவம் நடந்த அன்று காவல் நிலையத்தில் இரவு முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று சொல்லக்கூடிய ஐந்து நபர்கள் உள்ளிருந்து உள்ளனர். இதில் காவலர் முருகன் தனது வாக்குமூலத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஐந்து நபர்கள் தான் தந்தை மகனை தாக்கியதாகவும் கூறியுள்ளார் என தகவல் உள்ளது” என்றார். மேலும், சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை இதுவரையும் விசாரிக்கவும் இல்லை குற்றப்பத்திரிகையில் அவர்கள் குறித்து எதுவும் சேர்க்கப்படவும் இல்லை. எனவே இதில் உள்நோக்கம் உள்ளது எனவும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.

வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, மூன்று காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x