வரதட்சணை கொடுமையால் காதலித்து திருமணம் செய்த மனைவியை இரண்டாவது மாதமே கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தான். கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அப்பெண் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா சேர்ந்தவர் ராஜலிங்கம் மகள் ராஜேஸ்வரி (18). இவர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் வி.பரங்கினி கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகனான துளசிங்கம் என்கிற ஜீவாவும் (19) படித்து வந்தார்.
ராஜேஸ்வரியை காதலிப்பதாக ஜீவா கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் ராஜேஸ்வரிக்கும், துளசிங்கத்திற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில நாட்களிலேயே குடும்பத்தினரின் வற்புறுத்தலால் வரதட்சணை கேட்டு காதல் மனைவியை சித்ரவதை செய்துள்ளார் ஜீவா.
தான் கணவன் வீட்டில் கொடுமை அனுபவிப்பதாக கூறி பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார் ராஜேஸ்வரி. இதனால், ஆத்திரமடைந்த ஜீவா, ராஜேஸ்வரி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் இதனை மரண வாக்குமூலமாக தந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். பதின்பருவத்தில் முதிர்ச்சியற்ற மனநிலையில் காதல் என்ற பெயரில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் கசப்பான அனுபவங்களாகவே அமைந்துவிடும் என்பதை மாணவிகளும், மாணவர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
