“முதல்வரும், துணை முதல்வரும் ராமர், லட்சுமணன் போல் உள்ளார்கள்!” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

முதல்வர், துணை முதல்வரும் ஒருதாய் பிள்ளையாக ராமர், லட்சுமணன் போல் உள்ளார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து, கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுகவுக்கு மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் காலி பானையாக உள்ளனர். முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை. அவர்கள் இருவரும் ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள். வரும் 7ம் தேதி இருவரும் ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள்” என கூறினார்.
அதுமட்டுமின்றி, தலைமை அறிவிக்கும் கருத்துக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் எனவும், தனி ஒருவர் சொல்லும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது. கிராம சபை கூட்டம் நடத்துவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.