போலீஸ் அராஜகத்திற்கு அஞ்சாமல், இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல தயாராகும் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் சென்று, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இரு தினங்கள் முன்பு ஹத்ராஸ் செல்ல முயன்றபோது போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தியை போலீசார் பிடித்து கீழே தள்ளியதில் தலைகுப்புற விழுந்தார். பின்னர் ராகுல், பிரியங்கா இருவரும் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம். நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு எதிர்க்கட்சி தலைவர்கள் இதுகுறித்து கண்டனங்களை பதிவு செய்தனர்.
ராகுல் காந்தியை கீழே தள்ளியதை கண்டித்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். தான் யாருக்கும் பயப்படப்போவதில்லை என்று ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் செல்கிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மிருகத்தனமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் இன்று ஹத்ராஸ் செல்கிறார்கள். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசால் அந்த பெண் உடல் ரகசியமாக தகனம் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்பார்கள்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.