ஒரு தலை காதலால் விபரீதம்.. தன்னைத் தானே கழுத்தை அறுத்து தற்கொலை!!

ஒரு தலை காதலால் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு இளம்பெண் குடும்பத்தினரை வாலிபர் கொல்ல முயன்றார். முடியாததால் தனக்கு தானே கண்ணாடியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
வளசரவாக்கத்தில் இன்று காலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம், அன்பு நகர் 1வது தெருவை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது மகள் பார்கவி (21), விவசாயம் குறித்த பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம் (22). அரியலூரை சேர்ந்த இவரும், விவசாய படிப்பில் பட்டதாரி.
பார்கவிக்கு ஜீவானந்தத்தை நன்றாக தெரியும் என்பதால், அவ்வப்போது சென்னைக்கு வரும்போது, பார்கவியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். பெற்றோர் இல்லை என ஏற்கனவே ஜீவானந்தம் கூறியதால், பார்கவியின் பெற்றோரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார் ஜீவானந்தம். பார்கவி வீட்டில் வழக்கம் போல தங்கினார். இன்று காலையில் திடீரென ஜீவானந்தம், பார்கவியின் குடும்பத்தை தீ வைத்து கொளுத்த முயன்றுள்ளார். முடியாததால் கண்ணாடியால் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
உடனே இதுபற்றி வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சில தினங்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னைக்கு வந்த ஜீவானந்தம், பார்கவி வீட்டில் தங்கியுள்ளார். நேற்று காலையில் திடீரென பார்கவியிடம், ‘நான்தான் உன்னை திருமணம் செய்வேன், நீ வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள கூடாது’ என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ஜீவானந்தம், சமையல் அறையில் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, பார்கவி மற்றும் அவரது குடும்பத்தினரை தீ வைத்து கொளுத்தினார். உடனே சுதாரித்து கொண்ட அவர்கள், தீயை அணைத்தனர்.
பின்னர், ஜீவானந்தத்தை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும் கோபம் தீராத ஜீவானந்தம், அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு, கண்ணாடியை எடுத்து, தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து இறந்தார்’ என்பது தெரியவந்தது. தீயில் சாரதா, பார்கவி ஆகியோரது தலைமுடி லேசாக கருகியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.