அயோத்தி ராமர் கோயில் பூசாரி, 15 காவலர்களுக்கு கொரோனா… பூமி பூஜை என்னாகும்?

அயோத்தி ராமர் கோயில் பூசாரி மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அயோத்தியிலுள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமி பூஜை விழா ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை கவனித்து வருகிறது. விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட 50 வி.வி.ஐ.பிக்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ராமர் கோயிலில் பணியாற்றி வரும் தலைமை அர்ச்சகருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்தான், பூமி பூஜைக்கான முக்கிய சடங்குகளை நிகழ்த்துவதாக இருந்தார். தற்போது, கோயில் தலைமை அர்ச்சகரால், பூமி பூஜையில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியப் பூசாரிக்கு கொரோனா வந்த சம்பவம் அறக்கட்டளை நிர்வாகிகளை கலக்கமடைய செய்துள்ளது.
.
அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டு விழா பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 15 காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
பிரதமர் வரவுள்ள நிலையில், பூசாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது நிகழ்ச்சி ஏற்பாட்டார்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரதமருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டு விடாமல் தடுக்க, பலகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 5-ம் தேதி பூமி பூஜை விழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.