கொரோனா பாதிப்பால் உலக மக்களின் வறுமை பல மடங்கு அதிகரிக்கும் என்று உலக வங்கி கணிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக 88 மில்லியனில் இருந்து 150 மில்லியன் மக்கள் வறுமைக்கு ஆளாகலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 2017 ஆண்டிலிருந்து 9.2 சதவீதம் வறுமையின் அளவு அதிகரிக்கும். அதாவது 88 மில்லியனில் இருந்து 150 மில்லியன் மக்கள் வறுமைக்கு ஆளாகலாம். அத்துடன் தொற்று நோய் பாதிப்பு சரிசெய்யப்பட்டால் 7.9 சதவீதமாக குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ், “தொற்றுநோய் மற்றும் உலகளாவிய மந்தநிலை போன்ற காரணங்களால், உலக அளவில் 1.4 சதவீதம் பேர் வறுமை நிலைக்கு மாறக்கூடும். வளர்ச்சி முன்னேற்ற பாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நடவடிக்கைகள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட 82 நாடுகள் இதில் பெருமளவில் பாதிப்படையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் தற்போதைய பொருளாதார பின்னடைவுகளை நாம் கருத்தில் கொள்ளவில்லை என்றால், 2030-ம் ஆண்டில் வறுமையின் விகிதம் எதிர்ப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.