இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன வீரரை அந்நாட்டிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்!!

கிழக்கு லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் அந்நாட்டிடம் ஒப்படைத்தது.
கடந்த 19 ஆம் தேதி சீன ராணுவ வீரரான வாங் யா லாங் என்பவா் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் எல்லைப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்துவிட்டாா். அவா் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார்.
கடல்மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால், அவரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானதால், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள், உணவு, வெதுவெதுப்பான ஆடைகள் உள்ளிட்டவை இந்திய ராணுவம் வழங்கி வந்தது.
இதனிடையே சம்பந்தப்பட்ட ராணுவ வீரரைக் காணவில்லை என்றும், அவா் குறித்து தகவல் தெரிந்தால் பதிலளிக்குமாறும் சீன ராணுவம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பிரதாயங்கள் முடிந்ததும் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் எல்லைப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரான வாங் யா லாங்கை, செவ்வாய்க்கிழமை இரவு சுசூல் மோல்டோ என்ற இடத்தில் அந்நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது .