“கொரோனா தொற்றை டிரம்ப் கையாண்ட விதம் மிகப்பெரும் தோல்வி கண்டுள்ளது” கமலா ஹாரிஸ் கடும் தாக்கு!

கொரோனா நோய்த் தொற்றை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்ட விதம் மிகப் பெருந்தோல்வி என்று அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உடா மாகாணத்தில் சால்ட்லேக் சிட்டியில் புதன்கிழமை இரவு தேர்தல் பிரசார விவாதத்தில் பங்கேற்று கமலா ஹாரிஸ் பேசினார். அதிபர் டொனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் கொரோனா விவகாரத்தைக் கவனித்துக் கொள்ளும் துணை அதிபர் மைக் பென்ஸைக் கடுமையாகச் சாடிய அவர், கொரோனாவுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழந்தது, நாட்டின் பொருளாதார சீர்குலைவு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார் கமலா ஹாரிஸ், அதோடு “இந்த நிர்வாகத்தின் இயலாத் தன்மையால் அமெரிக்கர்கள் அளவுக்கதிகமாகத் தியாகம் செய்துவிட்டனர். அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு அதிபரின் நிர்வாகத்திலும் நேரிடாத பெருந்தோல்வி இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, அமெரிக்க மக்களிடம் டிரம்ப் உண்மையை மறைப்பதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.
விவாதத்தில் பேசிய குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளருமான பென்ஸ், பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை டிரம்ப் நிர்வாகம் காப்பாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் மிக மோசமான காலகட்டத்தை நம் நாடு கடந்துகொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்ட பென்ஸ், அமெரிக்காவின் நலத்துக்கு டிரம்ப் முன்னுரிமையளிப்பதாகத் தெரிவித்தார்.