இனி பெண்ணுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்தால், கடும் தண்டனை! அதிரடி முடிவு எடுத்த பிரான்ஸ் அரசு!!

பெண்ணுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
தன் மகள் அல்லது தான் திருமணம் செய்யப்போகும் பெண், திருமணத்துக்கு முன் யாருடனாவது பாலுறவு கொண்டுள்ளாரா என்பதை அறிவதற்காக ‘கன்னித்தன்மை சோதனை’ எனப்படும் ஒரு சோதனை சில நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது. சில மதங்களில், பெண் கன்னித்தன்மை இழந்தவர் என தெரியவரும் பட்சத்தில், அவர் உறவினர்களாலேயே கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.
தற்போது இதுபோன்ற கன்னித்தன்மை சோதனை செய்யும் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அப்படி சோதனை செய்யும் மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 15,000 யூரோக்கள் அபராதமும் விதிக்க பிரான்ஸ் திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து, பிரான்ஸ் குடியுரிமை அமைச்சக அமைச்சரான மார்லேனே ஷியாப்பா (Marlène Schiappa) கூறுகையில், “வரும் டிசம்பரில் இந்த திட்டம் சட்டமாக்கப்பட உள்ள நிலையில், யார் பெண்ணுக்கு கன்னித்தன்மை செய்யக் கோருகிறார்களோ, அவர்களையும் தண்டிக்கவேண்டும், அது பெற்றோராக இருந்தாலும் சரி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப்போகும் ஆணாக இருந்தாலும் சரி” என்று கூறியுள்ளார்.
“ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பை கண்ணாலோ, விரல்களாலோ சோதிப்பதன் மூலம், அவள் திருமணத்துக்கு முன் பாலுறவு கொண்டிருக்கிறாளா என்பதை உறுதி செய்ய இயலாது. அத்துடன், அப்படி செய்வது அவளது மனித உரிமைகளை மீறும் செயலாகும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.