புயல் பாதிப்புகளை குறைக்க, புதிய எச்சரிக்கை கருவி… இந்தியாவில் விரைவில் அறிமுகம்!!

இந்தியாவில் புயல் பாதிப்புகளை குறைக்க, ஆற்றல் மிக்க புயல் எச்சரிக்கை கருவிகளை நாடு முழுவதும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்திய வானிலை மைய இயக்குனர் மகாபத்ரா தெரிவித்தார்.
உலக விண்வெளி வார கொண்டாட்டத்தை முன்னிட்டு, ‘புயல்களை துரத்துதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு இந்திய தொலை உணர்வு சங்கத்தின் தில்லி பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய டாக்டர் மகாபத்ரா, உலகம் முழுவதும் புயல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் புயல் பாதிப்புகளை குறைக்க ஆற்றல் மிக்க புயல் எச்சரிக்கை கருவி விரைவில் செயல்படுத்தப் படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய புயல் எச்சரிக்கை கருவி, மாவட்ட வாரியாக துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் எனவும், இவைகள் பேரிடர் நிர்வாக அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் டாக்டர் மகாபத்ரா கூறினார்.
இந்த கூட்டத்துக்கு முன்பு, அக்டோபர்- டிசம்பர் புயல் காலத்தை எதிர்கொள்வது குறித்த ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தை இந்திய வானிலை மையம் நடத்தியது. இதில் புயல் காலத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், தயார் நிலை குறித்து வானிலை நிபுணர்கள், பேரிடர் குழுவினர், விமானப்படை மற்றும் கடற்படையினர் உட்பட அனைத்து தரப்பினருடனும் டாக்டர் மகாபத்ரா ஆய்வு செய்தார்.