“மோடி தன்னுடைய தோற்றத்தை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார், ராணுவ வீரர்களை பற்றிய கவலையில்லை” – ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணிக்க இரு விமானங்கள் வாங்கப்பட்ட ரூ.8,400 கோடிக்கு சியாச்சின், லடாக் எல்லையில் உள்ள வீரர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கியிருக்கலாம் என்று சாடியுள்ளார்.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணிக்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் ரூ.4,800 கோடியில் வாங்கப்பட்டன.
‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தின் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் போயிங் நிறுவனம் இந்த விமானத்தில் உருவாக்கியுள்ளது குடியரசுத் தலைவர், பிரதமருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விமானங்களுக்கு ‘ஏர் இந்தியா ஒன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை ‘பறக்கும் கோட்டை’ என்று வர்ணிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்தி நாளேடு ஒன்று சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், எல்லையில் பனிப்பகுதியில் பணியாற்றும ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஜாக்கெட், ஷூ, குளிருக்கான ஆடைகள் வாங்குவதற்கு மத்திய அரசு தாமதம் செய்ததாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார் என்று தெரிவித்திருந்தது.
இந்த செய்தியை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “ விமானம் வாங்குவதற்காக ரூ.8,400 கோடி செலவு செய்துள்ளார். ஆனால், சியாச்சின், லடாக் எல்லையில் தேசத்தைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை விமானம் வாங்கப்பட்ட தொகையில் வாங்கியிருக்கலாம்.
குளிருக்கான 30 லட்சம் ஆடைகள், 60 லட்சம் ஜாக்கெட், கையுறை , 67 லட்சத்து 20 ஆயிரம் ஷூ , 16 லட்சத்து 80 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விமானம் வாங்கிய தொகையில் வீரர்களுக்காக வாங்கியிருக்கலாம். தன்னுடைய தோற்றத்தை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார், ராணுவ வீரர்களை பற்றிய கவலையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.