“2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்”- பாடகர் எஸ்.பி.பி

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடியவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது 74. கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. “2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில்,
கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார். எஸ்.பி.பி. அவ்வப்போது கண்விழிப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சீக்கிரமே உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.