எதற்கு இந்த ஏவுகணை ஊர்வலம்… உலக நாடுகளை அச்சுறுத்த முயல்கிறதா வடகொரியா?

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஹவாசாங் ஏவுகணை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியுலகிற்கு அதிக உள்நாட்டு விஷயங்கள் தெரியாத இருண்ட நாடு வடகொரியா. இதன் அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியானது.
முன்னதாக இவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் சந்திப்பில் கையெழுத்திட்டார். ஆனால் வடகொரியா ரகசியமாக அணு சோதனை செய்துவருவதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வடகொரியாவில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் எத்தனை, அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்ற ஒரு தகவலும் இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் தலைநகர் பியாங்யங்கில் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் ஒரு பெரிய ராணுவ ஊர்வலம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த ராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஹவாசாங் ஏவுகணை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களுக்கு காட்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல வடகொரியா பலமுறை இதற்கு முன்னர் ஏவுகணை ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவ்வப்போது சர்ச்சையையும் உலக நாடுகள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி வந்தன. உலக நாடுகள் ஏவுகணை சோதனை தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்த வடகொரியா, தொடர்ந்து இவ்வாறாக தங்கள் அணு ஆயுத தயாரிப்புகளை வெளியுலகுக்கு காட்டி அச்சுறுத்தி வருகின்றன. வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது அமெரிக்காவை அச்சுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.