“புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!” சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாகவும், தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வரும் 14ம் தேதி, அந்தமான் கடல் பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் வேப்பூரில் 13 செமீ., மதுரை, ஒகேனக்கல்லில் தலா 8 செ.மீ., ராசிபுரத்தில் 7 செ.மீ., மேலூர்,சிவகங்கை, நிலக்கோட்டை, தல்லாகுளம், சோழவந்தான், சூலகிரியில் தலா 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.