நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று அருண்மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த வழக்கு மீண்டும் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைக்கு இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று அருண்மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
