“அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும்!” நிர்மலா சீதாராமன் தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், நுகர்வோர் வாங்கும் திறனை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 7 ஆவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் கொடுக்கும் வசதி இல்லாத சூழ்நிலையிலும், நடப்பு ஆண்டில் மட்டும் நுகர்வோரின் திறனை அதிகரிக்க முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இதனைப் பயன்படுத்தி 12%-க்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ரூபே கார்டில் இந்த பணம் செலுத்தப்படும். மாதம் ரூ. 1,000 வீதம் 10 மாதங்கள் தவணையாக சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதன் மூலமாக 19,000 கோடி ரூபாய் கூடுதலாக பொருள்கள் வாங்கப்படும். மாநிலங்களும், தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசுடன் கைகோர்க்க வேண்டும்.
அதேபோன்று உள்கட்டமைப்புக்காக மாநிலங்களுக்கு 12,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கப்படும். இதனை திருப்பிச் செலுத்த மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். மேலும், பாதுகாப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, துறைமுகங்களை மேம்படுத்த ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படுகிறது. மொத்தமாக நாட்டில் ரூ.73,000 கோடி தேவை அதிகரிக்கும் என்றார்.